Thursday 27 January 2022

கருப்பம்மாயி காவியம்

 



கருப்பம்மாயி காவியம்

சத்யபெருமாள் பாலுசாமி

 

 

ங்கொப்புச்சிய எடுக்கீல நாலு பூவு எண்ணிப் போட்டு எடுத்தாங்கொ சாமி. அப்பொ எங்கு கலாமணி நாலு மாசொ வவுத்துல” – ‘கலாமணிஎன்று சொல்லும் பொழுது இமைத் தோல் சரிந்து மூடிய கண்களில் ஒரு புத்தொளி. உழவோட்டிய மேட்டாங்காட்டைப் போன்ற  முகத்தில் ஒரு புத்தழகு. உள்ளத்தில், என்றைக்கோ மரணத்திற்குப் பறிகொடுத்துவிட்ட தனது ஆருயிர்க் குழந்தையை, மீண்டும் மானசீகமாகத் தனது கைகளில் துள்ளத் துடிக்க ஏந்தும் தாய்மையின் பரவசம்!

 

அதிகாலையில் வாசக் கூட்டும் பொழுது திடீரென நேர்ந்த எல்லைப் பிரச்சினையால் சொற்கள் முற்ற

போளே வறட்டு முண்டஎன்று வெடுக்கெனக் கேட்டுவிட்டது  தாளபாளையத்து அம்மாயி.

 

அந்தத் தாக்குதலைக் கருப்பம்மாயி சற்றும் எதிர்பார்க்கவில்லை போல. விளக்குமாற்றைக் கீழே போட்டுவிட்டு விசும்ப ஆரம்பித்துவிட்டது. வெள்ளைச் சீலையின் முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு மேலும் தோளும் குலுங்க அதுபொம் பொம்என்று அழுத போது  இந்தச் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொட்டம்மாயியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

 

ளேய் தொண்டுமுண்ட! உனக்கென்னளே தெரியி அசுலூருக்காரிக்கி? அந்தப் பிள்ள மட்டூ இருந்திருந்துதுன்னா இந்நேரத்திக்கி எங்கு கருப்பாயாளூம் பேத்துப் பிதுரெல்லா எடுத்திருப்பாள்ளே, ளேய்... ஆரப் பாத்தளே பொசுக்குன்னு வறடீன்னு சொல்லிப் போட்டவொ?!”, சொற்களை விரசலாக எடுத்த பொட்டம்மாயிக்கும் வார்த்தைகளை முடிக்கும் போது விசும்பல் வந்துவிட்டது. கருப்பம்மாயை மாரோடு கட்டியணைத்துக்கொண்டது. பொட்டம்மாயி கருப்பம்மாயிக்குத் தாய்மாமன் பெண்டாட்டி. விக்கினது விக்கினது போல் ஆகிப்போன தாளபாளையத்து அம்மாயி விளக்குமாற்றை வீசிப்போட்டுவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்திற்கு மட்டுமல்ல, பேரனான எனக்குமே கூட இது மிகவும் புதிய செய்தியாகத் தான் இருந்தது. இத்தனை நாட்களாக ஊராரைப் போல நானுமே கூட, ‘பிள்ளை குட்டி இல்லாத ஒண்டிக்காரிஎன்று தான் கருப்பம்மாயியை எண்ணிக் கொண்டிருந்தேன்.

 

அப்பறொ எப்புடீங்மாயி அந்தப் பாப்பா செத்துப் போச்சு?” 

 

பாப்பாளாமா?” கண்களைச் சுருக்கிச் சிரித்துபடி எனது தாவாக்கட்டையை விரல்களால் தொட்டுக் கொஞ்சிக் கொண்டேபாப்பா இல்ல சாமி உனக்கு. சின்னாயா. கலாமணிச் சின்னாயா”, என்று திருத்தியது அம்மாயி.

 

அது என்ன விசித்திரமான கணக்கோ இந்தப் பாழாய்ப்போன இயற்கைக்கு! கருப்பம்மாயிக்கு மூன்று அத்தைகள். மூவருமே அவரின் அப்பாவிற்கு மூத்தவர்கள். கருப்பம்மாயிக்கும் தவசியம்மாள் என்று ஒரு அக்கா, முனியம்மாள் என்று ஒரு தங்கை. மூவருக்கும் கடைசியாக நாச்சியப்பன் என்ற தம்பி. அந்தத் தம்பியின் மீது தாளாத பிரியம் கொண்டிருந்தார்கள் அக்காள்கள் மூவரும்.கொலையை நோவுது கொலையை நோவுது”, என்று தனது ஆயுள் முழுவதும் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நாச்சியப்பன், பத்து வயது கூட நிரம்பாத இரண்டு குழந்தைகளையும் மனைவியையும் பரிதவிக்கவிட்டுவிட்டு அகாலத்தில் மரணித்த பொழுது அவர்கள் மூன்று பேருமே துடிதுடித்துப் போனார்கள். என்றைக்கோ சிறு வயதில் மஞ்சள் காமாலைக்காகத் தம்பியின் அடிவயிற்றின் குறுக்கே வைத்தியகாரர் இழுத்துவிட்ட சூட்டுக் கோலின் பெருந்தழும்பைத் தடவித் தடவித் தங்களது நெஞ்சில் அறைந்து கொண்டார்கள். பாடிப் பாடித் தலைதலையாகப் போட்டுக் கொண்டார்கள்.

 

எங்கப்பெ எங்களப் பறக்கப் பறக்க உட்டுட்டுப் போனாப்பலயே இதுகளப் பூவும் பிஞ்சுமா உட்டுப்போட்டுப் போயிட்டானே சண்டாளேஏஏஏ!என்று அங்கலாய்த்த தவசியம்மாயி தொடர்ந்ததுஎங்கம்மாளுக்கு ஒரு வெள்ளாட்ட வாங்கிக் குடுத்தாக்கோட மேச்சுக் கட்டி வளத்தத் தெரியாது சாமி. வெள்ளைச்சோளம். அதுனால எங்கத்தீக மூனு பேரும் பொட்டப்புள்ளீகொ எங்கள ஆளுக்கொருத்தராக் கூட்டீட்டுப் போயிட்டாங்கொநாங்களே வளத்தி அவியவீ பசங்களுக்குக் கட்டிக்கறொஅப்புடீன்னு.  எங்கு நாச்சீப்பனுக்கு அப்ப ஒரு மூனு வயிசுதா இருக்கும். மொலைப்பாலும் மறக்குல. அதுனால அவன மட்டு எங்கம்மாட்டயே உட்டுட்டாங்கொ. எங்கம்மா, நாலு ஊடுகளுக்கு நெல்லுக்குத்தப் போவு. கருக்காக் குரணை தாங் கூலி. அந்தக் கருக்காக் குரணையைத் தின்னு தின்னு சேராதயோ என்னமோ தா எங்கு நாச்சீப்பனுக்கு மஞ்சக்காமால கண்டுட்டுதாட்டொ?! அன்னைலுருந்துகொலைய நோவுது கொலைய நோவுதூன்னேழுதூட்ருந்தான்! தா! இன்னக்கிக் கானல்ல கொண்டுபோயி வெச்சுட்டொ”, வெறுந் தரையைப் பார்த்தபடி  கண்களைத் துடைத்துக் கொண்டது அம்மாயி.

 

அன்னாடங்காய்ச்சி வண்ணாமாத்துஎன்ற நிலைமையில் தான் தாங்களும் இருந்தார்கள் என்றாலும், சொன்னபடியே அத்தைகள் மூவரும் அண்ணன் மகள்களை வளர்த்து மருமகள்களாகவும் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். கருப்பம்மாயி வாழ்க்கைப்பட்டது நடு அத்தையான செல்லாத்தையின் ஒரே மகனான முத்துச்சாமிக்கு. தான், சதா பிடித்துக் கொண்டிருந்த பீடியைப் போலவே மெலிந்து கொண்டு போன முத்துச்சாமி நுரையீரல் கருகி இறந்து போன போது கருப்பம்மாயிக்குப் பதினெட்டு வயது தொடங்கியிருந்தது. கல்யாணமாகி ஆறுமாதங்களே முடிந்திருந்தன. ஊர்வழக்கப்படி, நாச்சியப்பன் கையால் அந்தச் சிறிய வயதில் வெள்ளைக்கோடி வாங்கியது கருப்பம்மாயி. அம்மாயிக்கு நேர்ந்த இந்தக் கொடுமையைப் பற்றிய எண்ணம் எழும் பொழுதெல்லாம் எண்ணிக்கொள்வேன்அம்மாயி நடுவீட்டில் நீட்டிப்படுக்கும் அன்றைக்குப் பச்சைப் பசேலென்று குளுகுளுப்பான ஒரு காஞ்சிப்பட்டைக் கொண்டு உச்சிமுதல் பாதம் வரை போர்த்திவிட வேண்டும்”. 

......

 

மாம்பாட்டுக்காரி!” – இது தான் கருப்பம்மாயின் அடையாளம். அதற்குத் தெரியாத காட்டுவேலை என்று எதுவுமே கிடையாது. நெல்லறுக்கப் போனால் மற்றவர்களைவிட நாலு சிறகு சேர்த்து அறுக்கும். களையெடுக்கப் போனால் யாராலும் எட்ட முடியாதபடிக்கு முந்தும். மஞ்சளாயப் போனால் மக்கரை மக்கரையாகக் குவித்துத் தள்ளிவிடும். தோகையுரிக்கப் போனால் முழங்கு தான் கருப்பம்மாயைப் பார்த்து அஞ்ச வேண்டும்! கொட்டைமரம் சாய்க்கப் போனால் மூங்கில்காட்டில் ஆனை புகுந்த கதை தான்! காட்டுவேலை இல்லாத காலங்களில் ஊர்ப்பெரிய மனிதர்களின் வீடுகளுக்கு எள்ளுருண்டைபிடிக்க, முறுக்குப்பிழிய, பொக்கிசம் சுட, கச்சாயம் தட்ட, மிக்சர் தேய்க்க, லட்டுப் பிடிக்க என்று கிளம்பிவிடும். நல்ல சோறில்லாமல் வளர்ந்த அம்மாயிக்கு இந்தக் கைப்பக்குவம் எப்படி வாய்த்தது என்று கேட்டால்இதென்ன சாமி கம்ப சூஸ்தரொ? கண்ணுப் பாத்தாக் கையி செய்யிதுஎன்று சொல்லிவிட்டுக் கண்களைச் சுருக்கிக்கொண்டு சிரிக்கும். கூலிப்பணத்தையெல்லாம் எப்போதும் புதிது போலவேயிருந்த சுருக்குப் பையில் போட்டு அதை அடுக்கு மொடாவின் அடிமொடாவில் பத்திரப்படுத்தி வைத்திருக்கும். கடன் அன்பை முறிக்கும் என்பதில் யாருக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அம்மாயிக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. யாராவதும் கடன் என்று வாசல் பக்கம் வந்து நின்றால், தயவுதாட்சண்யம் இன்றிஇல்லைஎன்று கையை விரித்துவிடும். அதனால் தானோ என்னவோ இன்று வரைக்கும் கருப்பம்மாயிக்குக்கடன்என்றால் என்னவென்றே தெரியாது!

 

காசுபணத்தில் தான் இப்படியென்று இல்லை. சோறு போடுவதிலும் அம்மாயிக்குக் கை வராது.எங்கு கருப்பாயா மட்டு ஒரு அஞ்சு நாளைக்கித் தீனிபோட்டான்னாப் போதும், ஆனைகோட எளைச்சுப்போயிரும்”, என்று பொட்டம்மாயி கூட அவ்வப்போது கிண்டலடிப்பது உண்டு. 

 

மாரியாநோம்பி சாட்டினால் கருப்பம்மாயி பரபரக்க ஆரம்பித்துவிடும். சுண்ணாம்பை வாங்கிப் போட்டுத் தண்ணீர் ஊற்றிப் பொடித்து, நீலம் கலந்து, மொண்டிச் சீவக்கட்டையால் ஒற்றை ஆளாக உருட்டிக்கட்டிக்கொண்டு வீட்டைப் பூசி முடிக்கும் வரை ஓயாது. பூசி முடித்தவுடன் சுண்ணாம்புக் கரை கட்டி மாட்டுச் சாணத்தைக் கரைத்து ரெட்டைத் தடுக்கைக் கிடத்தி வைத்ததைப் போலப் பசேலென்று வீடு ஆசாரம் காரை வாசல் என்று அத்தனையையும் பளிச்சென்று வழித்துவிடும். அவ்வளவு தான் அம்மாயிக்கு நோம்பி வந்துவிட்டது! இனி, கொத்துமல்லி, வரமிளகாய், சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை போட்டுமொளவுடிஅரைத்துவிட்டு ஒரம்பரை அழைத்தால் மதி. அக்கா, அக்கா மகள்கள் மூன்று பேர்தம்பி குடும்பம் ஒன்று என்று எண்ணிவைத்தாற் போல வருடாவருடம் இந்த ஐந்து குடும்பங்களைத் தான் தவறாமல் அழைக்கும். அவர்களும் வந்துவிடுவார்கள். ஆளுக்கொரு வேலையாகப் பண்ணி இலையில் சோற்றைப் பார்க்கப் பிற்பகல் மூன்றுமணியாகிவிடும். 

 


ஊரிலிருந்து கிளம்பும் போதே அம்மாவிடம் அப்பா சொல்லி வைப்பார், “நீ சோறு போட்றதுன்னாத் தா வருவேன்”. பின்னே? ஒரு கைக்கரண்டி சோற்றைத் தோண்டிப் பாதியை இலையில் சாய்த்துவிட்டு மீதிச் சோறு இலையில் விழும் முன்பேசோறு போதுமுங்ளா? சோறு போதுந்தானுங்கொ?” என்று கேட்டால் யாருக்குத் தான் சாப்பிடத் தோன்றும்? ஆனால், கருப்பம்மாயி அப்படித் தான் கேட்கும்.ரவக்கடைக்கி வாற ஒறம்பறைக்கீ வேணுமுல்ல?’ என்பது அதன் எண்ணம். ஆனால், நானறிந்து இரவு நேரத்தில் தவறாது வருகின்ற ஒரே விருந்தாளி நண்டி தான். மணி எட்டே முக்காலை நெருங்கும் பொழுது தனது இடது காலைத் தரக்கு தரக்கு என்று இழுத்தபடி வாசலுக்கு வந்து நிற்கும் நண்டி தனது நடுநடுங்கும் வயோதிகக் குரலால், “ஆயா... நா நண்டி வந்திருக்கறெ, ஒருவா சோறு போடுங்கொ சாமி”, என்று கெஞ்சலாகக் குரல் கொடுப்பார். அதற்காகவே காத்திருந்தது போல அம்மாயி சத்தம் போடும், “ஒறம்பறைச் சனமே இன்னுந் தின்னு முடிக்கில. அதுக்குள்ள அம்மாளுக்குச் சோறு கேக்குதா?”. ஆனால் நண்டி நகரமாட்டார். கிளுவமரங்களின் நிழலுடன் நிழலாக, தன்னைச் சூழ்ந்து கொண்டு வள் வள் என்று குரைக்கும் நாய்களைச்ச்சூடே அக்கட்ட போ! ச்சூடே அக்கட்ட போஎன்று அதட்டியபடியே நின்று கொண்டிருப்பார். ஒரு பத்து நிமிடக் காத்திருப்பிற்குப் பின் அவரது பாத்திரத்தில் சோற்றையும் கறியையும் போட்டுவிட்டுப், “பாத்துப் போளெ நண்டி. தடுமாறிக்கிடுமாறி இடுப்ப ஒடச்சுக்காதஎன்று அறிவுரைத்தபடி அவரது தலை மறையும் வரைக்கும் அந்தத் திசையையே பார்த்துக் கொண்டு நிற்கும் அம்மாயி. ஒருநாள் அதிகாலையில் நண்டி போயே போன செய்தியைக் கேட்டவுடன் முதல் ஆளாகப் பறந்து போய் வாசலில் நின்று குதிமாரடித்தது அம்மாயி. சாயங்காலம் எடுக்கும் வரைக்கும் அந்த வாசலே கதி எனக் கிடந்துவிட்டு வந்த அம்மாயி அன்றிரவு அடுப்புப் பற்ற வைக்கவேயில்லை.

......

 

நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஒரு நாள் காலையில், வாலைப் போன்ற அதன் பின்கொசுவம் விழும் இடம் முழுதும் இரத்தத்தால் நனைத்திருப்பதை அம்மாவிடம் கண்டு சொன்னேன்.சூரை நாயி. மொதல் ல அக்கட்டால போஎன்று என்னை அதட்டிவிட்டுக் கருப்பம்மாயிடம் சேலையை மாற்றச் சொன்னது அம்மா. பொதுவாகவே, கிராமங்களில் ஊருது என்றால் பறக்குது என்பார்கள். ஆனால், இத்தனை ஆண்டுகளில் அம்மாயிக்கு ஒரு கெட்ட பெயர் வந்ததில்லை. ஒருத்தருடனும் அது இணைத்துப் பேசப்பட்டதில்லை. இத்தனைக்கும் அதற்கும் அதன் நேர்மூத்த அக்காவான தவசியம்மாயி வீட்டுக்காரரான எனது அப்பச்சிக்குமான பாசப்பிணைப்பு அலாதியானதாக இருந்தது. 

 

ஊரே பெரியம்மை வார்த்துச் செத்துக் கொண்டிருந்திருக்கிறது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தாலே ஒட்டிக் கொள்ளும் என்ற அச்சத்தில் உறைந்திருந்தார்களாம் மக்கள். வயது வேறுபாடின்றி வீட்டிற்கு இருவர் செத்துக் கொண்டிருந்த நேரத்தில், மூன்றரை வயதுச் செல்ல மகளான கலாமணியை இக்கத்தில் இடுக்கிக்கொண்டு யார் தடுத்தும் கேட்காமல் நிறைகாலாய் அம்மை வார்த்துப் படுத்திருந்த மச்சானைச் சென்று பார்த்து அழுதுவிட்டு வந்ததாம் கருப்பம்மாயி. தனது அத்தனை சுக துக்கங்களிலும் தோள்கொடுத்து நிற்கும் மனிதரைக் கடைசியாகப் பார்க்கமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அப்படிப்பட்ட காரியத்தை அது அன்றைக்குச் செய்யத் துணிந்திருக்கிறது! ஆனால், அப்பச்சியோ அதற்கப்புறம் நாற்பதாண்டுகள் முகம் நிறைந்த அம்மைத் தழும்புகளுடன் வாழ்ந்தார். கலாமணி தான், அவரைப் பார்த்துவிட்டு வந்த ஐந்தாம் நாளிலேயே அம்மை வார்த்து, அடுத்த இரண்டே நாட்களில் தனது அம்மாவின் கைகளை என்றென்றைக்குமாக விட்டு நீங்கிப் போயிருக்கிறது. அப்பச்சி இறந்த அன்றைக்கு,

 

வையை கரையோரம் வருஞ்சனங்களாயிரங்க

வையை கரை மெய்யாவுமா? வாருஞ்சனந் தாயாவுமா?

பொய்யை கரையோரம் போகுஞ்சன மாயிரங்க

பொய்யைகரை மெய்யாவுமா?

போகுஞ்சனந் தாயாவுமா?”

என்று தனது தாயையே இழந்ததாக எண்ணிப் பாடிக் கதறியதைத் தான் கேட்டிருக்கிறேன். கலாமணிக்காக என்னென்ன பாடியதோ! எத்தனை நாள் பாடியதோ!! 

.......

 

 

மகன் போன பிறகு தானும் மகள் சிவகாமியும் மருகளும் பேத்தி கலாமணியும் என்று வாழ்ந்திருக்கிறது செல்லாயி. பேத்தியும் இறந்த துக்கத்தைத் தாளமாட்டாமல் அழுதழுதோ என்னவோ சில மாதங்களில் அதன் கண்களில் அழற்சி ஏற்பட்டு அது முற்றிச் சீழ் வடிய ஆரம்பித்திருக்கிறது. அந்த வியாதிக்கு யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் மருந்து வாங்கித் தின்றால் தான் குணமாகும் என்று யாரோ சொல்ல, நள்ளிரவில் தனியாளாகக் கிளம்பி ஈங்கூருக்குப் போயிருக்கிறது. மூன்று நாட்கள் தங்கியிருந்து மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதால் உறவுக்காரர் வீட்டில் தங்கியிருந்திருக்கிறது. இந்த நேரத்தில் உள்ளூரில்செல்லாயா எவங்கோடவோ ஓடிப்பொயிட்டா’, என்று யாரோ கிளப்பிவிட, அந்த அவமானத்தில் அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டுச் செத்துப் போயிருக்கிறது சிவகாமி. செய்தியறிந்து செல்லாயி வருவதற்குள் சிவகாமி வெந்து நீறாகியிருந்தாராம். அதற்கப்புறம், செல்லாயி அதிக நாள் வாழவில்லை. மருமகளுக்குத் துணையாகத் தவசியம்மாளின் மூத்த மகளான எனது தாயைக் கூட்டி வந்து வளர்க்க ஆரம்பித்த சில மாதங்களிலேயே செத்துப்போயிருக்கிறது. இப்படித் தான் தனிமரமாக நின்ற கருப்பம்மாயிக்குத் துணையாக வந்து சேர்ந்திருக்கிறது எனது அம்மா.

 

.........

 

 

ஆனாலும் கருப்பம்மாயியால் தனது அக்காளின் மகளைத் தன் மகளாகப் பாவிக்கவே முடியவில்லை. நானே பலநேரங்களில், “நீதாம்மா, எங்கம்மா எங்கம்மான்னு ஒழுதுக்கற. அது ஒரு நாளூ உன்னையத் தம்பிள்ளைன்னு ஆருகிட்டையுஞ் சொல்லி நாங்கேட்டதில்ல”, என்று நக்கலடிப்பதுண்டு.அந்தக் கெரவத்துக்கு வாசல்ல ஒரு பில்லு மொளச்சாக்கோடப் புடிக்காது. நீயே பாத்தீல்லொ சாமி? பொடக்காணிப்பக்கொ நெட்டிருந்தொ கருவாப்பில்லையக்கோடப் புடுங்கி எறுஞ்சத?”. அதென்னவோ, கருப்பம்மாயிக்கு வாசவளுவில் ஒரு செடி செத்தை ஆகாது. ஒரு கோழி கொக்கு நாடக்கூடாது. நாய் பூனை கூட அண்டக்கூடாது. எப்போது கீழே வைப்பார்கள் என்று காத்திருந்ததைப் போலப் பறந்து வந்து காப்பித் தம்ளரைக் கூடக் கைப்பற்றிக் கொண்டு போய் தேய்த்துக் கழுவிக் கயிற்றுக் கட்டிலின் மீது கவிழ்த்துவிடும்.இப்பிடியே தொடச்சுத் தொடச்சுத் தா ஊட்டையே தொடச்சு வெச்சுட்டா கெழ்ட்டு முண்ட”, என்று அம்மாயியின் தோழிகளே கூடச் சில நேரங்களில் செல்லமாகக் கிண்டலடிப்பதுண்டு. 

 

கருப்பம்மாயியின் நேரிளைய தங்கையான மினியம்மாயும் ஒருநாள் முந்திக்கொண்டார். அடுப்பிற்கு நேர்மேலே சாய்ப்பில் செங்கல்லைச் செருகி வைத்துக்கொண்டு அது பொருபொருத்த போதெல்லாம் திருட்டுத் தனமாகத் தின்ற வினை இரத்தத்தைத் சுண்டடித்துக் கொன்றுவிட்டது. தனது தங்கையின் பிணத்தை நடுவீட்டில் போட்டுவிட்டுத் தனது தங்கை மகனும் மருமகளும்சிக்குச்சா? சிக்குச்சா?” என்றபடி அவசர அவசரமாக அடுக்கு மொடாக்களைத் தேடியதைக் கண்ட கருப்பம்மாயிக்குத் திகிலடித்துப் போனது.சிக்கிடுது” - கணவனின் குரலைக் கேட்ட பின் தான் வந்த சனத்தைப் பார்த்து, “ஐயோ! எம்பட தங்கிக்கிளி பறந்து போயிருச்சே”, என்று அழுதது அத்தை. அதற்கப்புறம் தங்கையின் வீட்டில் கருப்பம்மாயியின் கால் ஏற மறுத்துவிட்டது.

 

கொள்ளும் பெயரன் பேத்தி பார்த்துக் கண்ணை மூடிய பொழுது பொட்டம்மாயியின் வங்கிக் கணக்கில் கணிசமான சேமிப்பு இருந்ததாகப் பேசிக் கொண்டார்கள். மறுகருப்பில் எல்லோரும் எலும்பை உறிஞ்சிக் கொண்டிருந்த பொழுது கருப்பம்மாயி மட்டும் கூரைமேல் வைத்த சோற்றை எடுத்த காகங்களைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தது.

 

தனக்கு இயன்றதைத் தனது பொறந்தவன் வீட்டிற்குக் கொடுத்து வந்த அம்மாயி அதையும் ஒரு நாள் நிறுத்திக் கொண்டது. 

 

....... 

 

 

அம்மாயி நாத்திகரல்ல. ஆனாலும் அதன் பக்தியைப் பார்த்தால் அப்படித் தான் தோன்றும். வெள்ளிக்கிழமைகளில் சேலையை உருட்டிக் கட்டிக்கொண்டு கரைகட்டி வீடுவழிக்கும். வாணியாற்றில் சென்று முழுகி எழுந்து வரும். அவ்வளவு தான். வெள்ளிக்கிழமை பிடித்தாயிற்று. வருடத்தின் ஒரே ஒரு நாளில் தான் கருப்பம்மாயி சாமியைப் பார்த்துக் கையெடுக்கும். மாரியாயி நோம்பியன்று சமையல் வேலைகள் முடிந்ததும் குளித்து முழுகும். பந்திக்கான ஏற்பாடுகள் நடக்கும் இடைவேளையில் கற்பூரத்துடன் கோவிலுக்குப் போகும். மாரியாயி முன்பாக நின்றுசாமி கடவளே, கைகால் சொகத்தக் குடுத்துக் கண்ணுவெளிச்சொ மங்காத காப்பாத்தாயா”, என்று கையெடுக்கும். பத்து ரூவாயைத் தட்டில் போட்டுவிட்டு நீறை வாங்கி நெற்றியில் இட்டுக்கொண்டு விரசலாக வீடு வந்து பந்தி வழங்க ஆயத்தமாகிவிடும். சாமியிடம் அம்மாயிக்கு வேறு எந்தவிதக் கொடுக்கல் வாங்கல்களும் நிகழ்ந்ததில்லை.சாங்கீம் பாத்துப் பாத்துப் பிள்ளப் பெத்தாச் சப்பட்டையாத் தாம் போகும்’, என்பது அது அடிக்கடி உதிர்க்கும் பழமொழி. 

........

 

 

படிப்பிற்காக நகரத்திற்கு நாங்கள் குடியேறிய பின் ஒண்டிக்கட்டையாகக் கருப்பம்மாயி மட்டும் ஊரில் தான் இருந்தது. தனது வீட்டையும் ஊரையும் விட்டுவிட்டு வர அது தயாராகவேயில்லை.இது ஊட்டக்கட்டித்தாவிப் புடுச்சுட்டிருக்கறதப் பாத்தாச் செத்ததுக்கப்பறொஊட்லயே என்னையப் பெதைங்களேன்னுசொல்லுமாட்டத்தானிருக்குது”, என்று எனது அம்மா கூட உறவினர்களிடம் புலம்புவதுண்டு. ஆனால் என்ன தோன்றியதோ, எங்கள் தவசியம்மாயிம் போன பின்பு எங்களுடனேயே வந்து இருக்க ஆரம்பித்துவிட்டது கருப்பம்மாயி. மாதாமாதம் சம்பளம் வந்ததும் அதன் கையில் ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை கொடுப்பேன்.உம்பட கண்ணாலத்துக்குத் தாஞ்சாமி சேத்தி வெய்க்கறேன்”, என்று சிரித்தபடியே பெருமிதமாகச் சுருக்குப் பைக்குள் போட்டுக்கொள்ளும்.

 

அன்றைக்குப் பந்தலை அன்னாந்து பார்த்த பொழுது எனது கண்ணே பட்டுவிட்டது. இளம் பச்சையில் வெள்வரியோடிய கோவைக் காய்கள் கணுவுக்குக் கணு பதமாகக் கொஞ்சிக்கொண்டிந்தன. நாலு நாள் விட்டால் முற்றித் திரண்டுவிடும். நண்பனின் வீட்டிலிருந்து கொண்டுவந்த விவசாயக் கோவைக் கொடியைப் பதியனிட்டுத் தொட்டிக்கட்டு வீட்டின் பந்தலில் ஏற்றியிருந்தேன். ஒரு காயை நீளவாக்கில் எட்டாய் வகிர்ந்து சுண்ட வணக்கினால் நாலு வட்டில் சோறு சொல்லாமல் உள்ளே போய்விடும். சரி, பறித்துவிடவேண்டியது தான். வழக்கம் போல, முதுகு நீண்டிருந்த இருக்கையொன்றைப் போட்டு அதில் கருப்பம்மாயை அமர வைத்தேன்.இங்க பாருங்மாயி, நீங்க உக்கோந்திருக்கற புடிமானத்துலதா நானிப்பொ இந்தச் சேரு மேல ஏறிப் பொறிக்கப் போறேன். நாவகமிருக்குதுல்லங்?  நீங்க எந்திரிச்சா நா அவ்வளவுதா! அம்பேல்!

 

எனக்குத் தெரீஞ் சாமி. நீ ஏறிப் பொறி

 

கிள்ளிக் கிள்ளிக் குண்டாவை நிரப்பிக் கொண்டிருந்தேன். தாழ்வாரத்தின் கீழ் அமர்ந்து வெங்காயம் தொலித்துக் கொண்டிருந்தது அம்மா. வாசலில் ஏதோ நிழலாட்டம். திரும்பிப் பார்த்த அம்மா, “தென்னொ? போன சுடீல வந்துட்டீங்க?”, என்றது. 

 

பண்ணாடியா?!!!!” – அம்மாயி.

 

அவ்வளவு தான் எனக்குத் தட்டாமாலை சுற்றியது. குண்டான் நழுவிக் கோவைக் காய்கள் சிதறின. ஐயோ, நான் விழுந்து கொண்டிருக்கிறேன். அதுவும் அம்மாயிக்கு நேர் மேலாக. போச்சு! அம்மாயியின் தலை மீதே குப்புற விழப்போகிறேன். அதன் கழுத்து உடைந்து தொங்கப் போகிறது. ஆமாம். நான் கொலைகாரனாகப் போகிறேன். ஐயோ அம்மாயீ! மனதிற்குள் அம்மாயியைக் கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்புக் கேட்டு அழுகிறேன்.தெரியாத உங்கு மேல உளுந்துட்டனுங்க அம்மாயீ

 

ஒருவேளை போலீஸ் கேஸ் ஆகிவிடுமா? இழவுக்கு வருபவர்கள் அம்மாயி இயற்கையாகச் சாகவில்லை என்று கண்டுபிடித்து விடுவார்களா? இல்லையில்லை. அதற்கு அப்பாவும் அம்மாவும் விடமாட்டார்கள். என்மீது பழிவராமல் பார்த்துக் கொள்வார்கள். அனைத்து வகையிலும் காபந்து செய்வார்கள். குளிப்பாட்டும் பொழுது கூட அம்மா கவனமாக இருக்கும். 

 

அம்மாயிக்காக அக்கறையுடன் யார் வந்து நிற்பார்கள்? அப்படி வந்து நிற்க எங்களைத் தவிர யார் இருக்கிறார்கள்? எனது சித்திகள்? ஆனால் அவர்கள் என்னைக் காட்டிக் கொடுக்கமாட்டார்கள். எனது மாமாக்கள்? அவர்களும் எனக்காக நிற்பார்கள். அம்மாயியின் பங்காளிகள்? அவர்களது தொடர்பறுந்தே பல்லாண்டுகள் கடந்துவிட்டனவே. நான் ஜெயிலுக்குப் போகமாட்டேன். அம்மாயியைக் கொன்றதற்காக நான் ஜெயிலுக்குப் போகமாட்டேன். அம்மாயிக்காகத் தான் யாருமே இல்லையே!

 

எப்படி விழுந்தேன்? எதன் மீது விழுந்தேன்? தரையில் கிடக்கிறேன். விழுந்த வேகத்தில் கையூன்றி எழ முயல்கிறேன் வலது முழங்காலில் கொஞ்சம் வலிக்கிறது. உள்ளங்கைகளில் எரிகிறது. அவ்வளவு தான். அம்மாயீ... என்று நெஞ்சடைக்கிறது. தலையை லேசாகத் திரும்பிப் பார்க்கிறேன்

 

 

ஐயோ! எஞ்சாமீ... உன்னயக் கொல்லத் திரிஞ்சனே பாவி சண்டாளி...” - பதறியபடி என்னைத் தூக்கிவிடக் குனிகிறது கருப்பம்மாயி!

 

000


நடுகல் இதழ் எண் 11.